குஜராத் மாநிலதின் மொடாசாவைச் சேர்ந்தவர் நிலன்ஷி படேல். இவர் தனது தலைமுடியை நீளமாக வளர்த்து, உலகின் மிக நீளமான கூந்தலை உடையவர் என்ற கின்னஸ் உலக சாதனையை படைத்தவர். தனது சாதனையை தானே முறியடித்த பெருமையும் உடைய இந்திய இளம்பெண் இவர். கடந்த 2018-ல் நிலன்ஷியின் முடி 170 செ.மீட்டர் நீளம் இருந்த நிலையில் டீனேஜ் பிரிவில் கின்னஸ் ரெக்கார்டில் இடம் பிடித்தார். பின் கடந்த ஆண்டு துவக்கத்தில் இவரது கூந்தலின் நீளம் 190 சென்டி மீட்டர் உயர்ந்ததை அடுத்து மீண்டும் கின்னஸ் ரெக்கார்டில் இடம் பிடித்து புதிய சாதனை படைத்தார்.
கடந்த ஜூலை மாதம் 18 வயது பூர்த்தியாகும் போது தனது கூந்தலின் நீளத்தை நிலன்ஷி படேல் அளந்த போது அது 200 செ.மீட்டர் (6 அடி 6.7 அங்குலம்) அளவை எட்டியது. தற்போது இவருக்கு 18 வயது நடந்து வரும் நிலையில் இவர் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக தனது கூந்தலை சிறிதளவு கூட வெட்டாமல் வளர்த்து வந்தார். இதனால் தான் இவரால் உலக சாதனை படைக்க முடிந்தது. தனது 6 வயதில் சிகையலங்கார நிபுணர்களுடன் தொடர்ந்து மோசமான அனுபவத்தை பெற்றதால், தனது கூந்தலை இனி வெட்டவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார் நிலன்ஷி.
கூந்தலை சிறிதளவு கூட வெட்டாமல் தொடர்ந்து கூந்தல் பராமரிப்பில் கவனம் செலுத்தி வந்தார். நீண்ட காலமாக வளர விட்டதன் காரணமாக அவரது முடி நன்கு செழிப்பாக மற்றும் நீளமாக வளர்ந்து இறுதியில் கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்தது. இது தொடர்பாக முன்னர் பேட்டியளித்திருந்த அவர், ' நான் எங்கு சென்றாலும் மக்கள் என்னுடன் சேர்ந்து செல்ஃபி எடுக்க நினைக்கின்றனர். இதனால் என்னை நான் ஒரு செலிப்ரட்டி போல் உணர்கிறேன்' என்று உற்சாகம் தெரிவித்திருந்தார் நிலன்ஷி.
சுமார் 12 ஆண்டுகள் வெட்டாமல் நீளமாக வளர்த்த கூந்தலை வெட்டி கொள்ள முடிவு செய்தார் நிலன்ஷி. அதிர்ஷ்ட வசீகரமாக தான் கருதிய கூந்தலை வெட்ட அவர் முடிவு செய்தாலும், இந்த செயலை ஏதேனும் ஒரு நோக்கத்துடன் செய்ய விரும்பினார். கூந்தலை வெட்டி கொள்ளும் விஷயத்தில் மூன்று விருப்பங்களைப் பற்றி யோசித்தார். ஒன்று வெட்டப்படும் தன் உலக சாதனை படைத்த கூந்தலை ஏலம் விடுதல், தொண்டுக்கு நன்கொடை அளித்தல் அல்லது ஒரு அருங்காட்சியகத்திற்கு நன்கொடை அளித்தல் உள்ளிட்ட விருப்பங்களை யோசித்துள்ளார்.
தன் தாயாருடன் கலந்தாலோசித்த பின், முடிவில் தன் நீண்ட கூந்தலை ஒரு அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்க முடிவு செய்தார். இதனை தொடர்ந்து அவர் தனது அழகிய நீளமான கூந்தலை 12 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் வெட்டி கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.
நிலன்ஷியைப் பொறுத்தவரை அழகிய நீண்ட கூந்தலை வெட்டி கொண்டது உணர்ச்சிபூர்வமான மற்றும் வாழ்க்கையை மாற்றும் தருணமாக இருந்தது. ஏனென்றால் முடி தனது அடையாளத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதி என்று அவர் நம்புகிறார்.