சிறப்பு டிஜிபி மீது பாலியல் புகாரளித்த பெண் எஸ்.பி, விழுப்புரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.
தமிழக காவல்துறை சிறப்பு டிஜிபியாக பணியாற்றி வந்த ராஜேஷ்தாஸ் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெண் எஸ்.பி ஒருவர் புகார் அளித்தார்.
இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து காவல்துறை சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து விழுப்புரம் சிபிசிஐடி போலீசார், சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக விழுப்புரத்தில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பெண் எஸ்.பி இன்று நேரில் ஆஜராகி நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.
அப்போது நீதிமன்ற அறை கதவு, ஜன்னல் கதவுகள் மூடப்பட்டு சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் குறித்து பெண் எஸ்.பியிடம் நீதிபதி திருமதி.பூர்ணிமா ரகசிய வாக்குமூலத்தை பெற்று பதிவு செய்தார். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீதிபதியிடம் பெண் எஸ்.பி ரகசிய வாக்குமூலம் அளித்தார்.