வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை, இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சுமை தூக்கும் தொழிலாளர்கள் கஞ்சித் தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டத்தின் காந்தி மார்க்கெட் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலரும் சுமை தூக்கி தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்த அவர்களை லாரி செட் உரிமையாளர்கள் வேலையில் இருந்து நீக்கினர். இதை கண்டித்தும் மீண்டும் தங்களுக்கு பணி வழங்கக் கோரியும் வலியுறுத்தி தொழிலாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக, CITU சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கத்தினர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கஞ்சித் தொட்டி திறந்து, போராட்டம் நடத்தினர். சிஐடியு மாவட்ட செயலாளர் ரங்கராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூ. மாவட்ட செயலாளர் ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கொரோனா பரவலால் வேலை வாய்ப்பை, வருவாய் இழந்து தவிக்கும் தொழிலாளர்களின் குடும்ப நிலை அறிந்து மாவட்ட நிர்வாகமும் தொழிலாளர் நலத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போடாரத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.