வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் சினேகா, இந்தியாவிலேயே முதன்முறையாக ‘சாதி மற்றும் மதம் அற்றவர்’ என அரசு சான்றிதழ் பெற்றுள்ளார்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தைச் சேர்ந்தவர் ம.ஆ.சிநேகா. திருப்பத்தூரில் வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் இவர், பல ஆண்டுகளுக்குப் பின்னர் போராட்டத்தில் வெற்றி பெற்று தன்னை ‘சாதி மற்றும் மதம் அற்றவர்’ என அரசின் சான்றிதழ் மூலமாகவே பெருமையுடன் பறைசாற்றி உள்ளார்.

சினேகா
நியூஸ் 18 தமிழ்-க்காக பிரத்யேகப் பேட்டியளித்துள்ளார் சினேகா. அவர் கூறுகையில், “எங்க அம்மா, அப்பா இருவருமே வழக்கறிஞர்கள். எங்க வீட்டில நான் உட்பட மூன்று அக்கா, தங்கைகள் இருக்கோம். மூணு பேருமே வழக்கறிஞர்களாகத் தான் இன்னைக்கி இருக்கோம்.
எங்க அம்மா- அப்பா சாதி, மதம் இல்லைன்னுதான் எங்களுக்கு ஊட்டி வளர்த்தாங்க. முதலாவதா பள்ளியில சேர்க்கும் போதே சாதி மதம் அற்றவள் என் மகள்ன்னுதான் எங்க அப்பா எங்களைப் பள்ளியில் சேர்த்தாங்க. சாதி, மதம் இல்லாமலா என பல கேள்விகளைக் கடந்துதான் பள்ளி அட்மிஷனே கெடச்சது.
சாதி மதம் எங்கக் குடும்பப் பெயரிலக்கூட தெரியக்கூடாதுன்னுதான் எனக்கு சினேகா, என் கூடப்பிறந்த சகோதரிகளுக்கு மும்தாஜ், ஜெனிஃபர்-ன்னு பேரு வச்சாங்க. காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு சிறையில் உயிர் நீத்த போராளி சிநேகலதா நினைவாகத்தான் சிநேகா-ன்னு பேரு வச்சாங்க. எனக்கும் மூணு பெண் பிள்ளைங்க. அவங்களுக்கு நானும் என் கணவர் எழுத்தாளர் பார்த்திபராஜாவும் சேர்ந்து முடிவுசெஞ்சு ஆதிரை நஸ் ரீன், ஆதிலா ஐரீன், ஆரிபா ஜெசி-ன்னு பேருவச்சு வளர்க்குறோம்.

’மதம் மக்களின் அபின்’-ன்னு மார்க்ஸ் சொல்லுவார். சாதிய அமைப்புக்கு அடையாளமா இருக்கும் சாதி சான்றிதழ் போல, சாதி மதம் அற்றவர் என்ற எங்க வாழ்வுக்கும் அடையாளம் வேணும். அதுக்கும் ஒரு சான்று வேண்டும் என முடிவு செய்து கடுமையா முயற்சி செய்திட்டு இருந்தேன். 2017-ம் ஆண்டு என்னுடைய கோரிக்கையை விண்ணப்பமா வச்சு முயற்சி இறுதியில இன்னைக்கு ஜெயிச்சிருக்கேன்.
என்ன சாதின்னு சொல்ல உரிமை இருக்கு ஆனா சாதி மதம் இல்லைன்னு சொல்ல உரிமை இல்லைன்னு பலமுறை என்னோட விண்ணப்பம் எல்லாம் தூக்கி எறியப்பட்டுச்சு. இன்னைக்கி திருப்பத்தூர் சப்-கலெக்டர் பிரியங்கா பங்கஜம், வட்டாட்சியர் சத்தியமூர்த்தி உதவியாலதான் என் முயற்சிக்குப் பலன் கெடச்சிருக்கு” என சாதி மதம் அற்றவராகப் பெருமையுடன் தனது சாதனைப் போராட்டத்தை விவரித்தார் சினேகா.