தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஆரணி தொகுதியில் அதிமுக வேட்பாளராக சேவூர் ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆரணிக்கு வருகைதந்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேவூர் ராமச்சந்திரனை ஆதரித்து அண்ணா சிலை அருகே தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.
அப்போது பேசிய முதல்வர், “அ.தி.மு.க இந்த தேர்தலோடு காணாமல் போய்விடும் என்று ஸ்டாலின் பேசுகிறார். வந்து பாருங்கள் இந்த கூட்டத்தை போல் இரண்டு மடங்கு கூட்டம் வரும் வழி முழுவதும் கடல் அலைபோல் கூட்டம் காணப்படுகிறது. குறுக்கு வழியில் புகுந்து முதலமைச்சரானவர் தான் கலைஞர் கருணாநிதி.
தலைவர் என்றால் தகுதியில்லாத தலைவர் ஸ்டாலின்தான்.
இந்தியாவிலேயே 100 டன் மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்த மாநிலம் தமிழகம். நலிவடைந்த தொழிலாளர்களை நிமிரச் செய்த அரசாங்கம் அ.தி.மு.க அரசாங்கம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கக்கூடிய முதல் மாநிலம் தமிழ்நாடு. நான்கு வருடம் இரண்டு மாதங்கள் மக்களின் ஆதரவோடு முதலமைச்சராக இருந்தேன் ஒரு அதிகாரியை கூட மிரட்டியது கிடையாது. தற்போதே ஸ்டாலின் அதிகாரிகளை மிரட்டுகிறார் அதோடு மட்டுமல்லாமல் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினும் அரசு அதிகாரிகளை மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவர்களிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தால் நாடு உருப்படுமா. ஸ்டாலின் முதலமைச்சராகவும் ஆகமுடியாது பெட்டியின் பூட்டையும் உடைக்க முடியாது. முதலமைச்சராகவே இல்லாத இவர் எதற்காக மனு வாங்குகிறார் அப்படி வாங்கினீர்களே என்னிடமாவது கொண்டு வந்து கொடுத்தாரா ஸ்டாலின்.
ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு ஆரணி வருவாய் கோட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. மண்டல போக்குவரத்து கழகம் அமைக்கப்பட்டிருக்கிறது.ஆரணி பகுதியில் புதிய காய்கறி மார்க்கெட் கட்டப்பட்டிருக்கிறது. ஆரணி தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என தேர்தல் பரப்புரையில் முதல்வர் பேசினார். முன்னதாக, வந்தவாசியில் பாமக வேட்பாளர் முரளிசங்கரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.