காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான இரண்டாவது நாள் கூட்டமும் முடிவு எட்டப்படாமல் நிறைவடைந்தது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி யமைத்துள்ளது. இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் சார்பில் 18 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.
அதிமுக, பாஜக, பாமக, விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் தங்கள் கட்சிக்கான சட்டமன்ற குழுத் தலைவரை தேர்ந்தெடுத்துவிட்ட நிலையில், தேசிய கட்சியான
காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவரை தேர்ந்தடுக்க முடியாமல் தவித்து வருகிறது.
காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக கடந்த வாரம் 7 ஆம் தேதி கூட்டம் கூடியது. அப்போது பல தரப்பின் கருத்துக்கள் கேட்கப்பட்டு கூட்டம் முடிவு எட்டப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் கூடியது. இன்றும் விவாதம் தொடர்ந்து தாகச் சொல்லப்படுகிறது. 4 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
கோஷ்டி மோதலுக்கு பெயர்போன தமிழக காங்கிரஸ் கட்சியில் சட்டமன்றக் குழு தலைவர் பதவியை பெற பெரும் போட்டியே நடந்து வருகிறது. விஜயதாரணி, பிரின்ஸ், செல்வபெருந்தகை ஆகிய மூவரும் தங்களுக்கு சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பு வேண்டுமென தலைமையிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தமிழக சட்டமன்ற குழு தலைவர் யார் என்பதை தேர்வு செய்வதில் இழுபறி நிலவுவதால் இது தொடர்பான அறிவிப்பு டெல்லியில் இருந்து வெளிவரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்