மதுரை பாண்டிகோவில் சாலையில் உள்ள அம்மா திடலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட பிரச்சார கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
நாளை காலை 10:30 மணி அளவில் துவங்கும் இந்த கூட்டத்தில் மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் போட்டியிடும் 36 வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு மோடி பிரச்சாரம் செய்கிறார்.
இந்த நிகழ்வில் பங்கேற்க இன்று இரவு தனி விமானத்தில் மதுரை விமான நிலையம் வரும் மோடி, காரில் பயணித்து பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் தங்குகிறார். நாளை காலை அங்கிருந்து காரில் புறப்பட்டு பிரச்சார கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இதற்கான பாதுகாப்பு பணிகளில் சுமார் 3000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். விமான நிலையம் வரும் பிரதமர் மோடி அங்கிருந்து நேரடியாக மீனாட்சி அம்மன் கோவில் செல்லலாம் என்ற அடிப்படையில் கோவிலிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.