PUDUCHERRY CONGRESS CADRES PROTEST IN CONGRESS OFFICE IN PUDUCHERRY SKD
புதுச்சேரியில் தொகுதி பங்கீடுக்கு எதிர்ப்பு; திக்விஜய் சிங்கை முற்றுகையிட்ட காங்கிரஸ் தொண்டர்கள் - துணைராணுவப் படை குவிப்பு
காங்கிரஸ் அலுவலகம்
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை திமுகவுக்கு ஒதுக்கியதாக கூறி காங்கிரஸ் தொண்டர்கள் தலைமை அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்டதால் ஆய்வுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
புதுச்சேரியில் ஒரே கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசும், திமுக-வும் முறையே 15 மற்றும் 13 தொகுதிகளில் போட்டியிட ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ள 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை இறுதி செய்வதற்கான ஆலோசனை கூட்டம் புதுச்சேரியில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், வேட்பாளர் தேர்வுக் குழு தலைவர் திக் விஜய் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் பல்லம் ராஜூ, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், அலுவலகத்திற்கு வெளியே திரண்டிருந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள மண்ணாடிப்பட்டு, திருப்புவனம், மங்கலம் உள்ளிட்ட தொகுதிகளை திமுகவுக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
#WATCH | Puducherry: Ruckus ensued during Congress Election Committee meet after a party leader waved DMK Party flag. Former CM V Narayanasamy was also present at the meeting. pic.twitter.com/A71VkQhabK
அவர்களை சமாதானப்படுத்த முயன்ற திக்விஜய் சிங்கை முற்றுகையிட்ட தொண்டர்கள் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் காங்கிரஸ் அலுவலகத்தில் துணை ராணுவப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிகழ்வுகளை பதிவு செய்யச் சென்ற செய்தியாளர்களை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மிரட்டியதுடன் அங்கிருந்து வெளியேற்றினர்.