மத்தியப் பிரதேசத்தில் கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை மீட்கும் பணியை பார்வையிட்ட சென்றபோது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் 50 அடி ஆழம் கொண்ட கிணற்றில் சிறுமி தவறி விழுந்துவிட்டாள். சிறுமியை மீட்கும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டிருந்தனர். 50 அடி ஆழ கிணற்றில் சுமார் 20 அடிக்கு தண்ணீர் இருந்ததாக கூறப்படுகிறது. கிணற்றுக்குள் இறங்கி சிலர் சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். கிராமமக்கள் கிணற்றில் சுற்றுச்சுவர் அருகே நின்று மீட்பு பணிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் அங்கு நின்றிருந்த சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் கிணற்றுக்குள் தவறி விழுந்தனர்.
இதனையடுத்து உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவு 11 மணியளவில் டிராக்டர் உதவியுடன் போலீஸார் மீட்புப்பணிகளில் ஈடுபட்டிருந்தனர். மீட்புப்பணிகளில் ஈடுபட்டிருந்த டிராக்டர் வாகனம் சரிந்து போலீஸாருடன் கிணற்றில் விழுந்தது. உடனடியாக மீட்பு பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும் வரவழைக்கப்பட்டனர். கிணற்றில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டு, மீட்பு பணி முழுவீச்சில் நடந்தது. கிணற்றில் டிராக்டருடன் விழுந்த போலீசார் மீட்கப்பட்டனர்.
போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் தொடர்ந்தன. கிணற்றில் விழுந்த கிராம மக்கள் 19 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் 8பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50000 நிவாரணம் வழங்கப்படும் என மாநில அரசானது தெரிவித்துள்ளது.