சீனா மற்றும் அந்நாட்டு தூதரகத்திடம் இருந்து காங்கிரஸ் கட்சி மூன்று லட்சம் டாலர் நிதியுதவி பெற்றுள்ளதாகவும், இது தான் காங்கிரஸ் மற்றும் சீனா இடையிலான ரகசிய உறவு என்றும் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.
கல்வான் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய அரசு வெளிப்படைத்தன்மை இல்லாமல் நடந்துகொள்வதாக, காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனத்தை வைத்து வருகிறது.
இது தொடர்பாக பேசிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பிரதமர் தேசிய நிவாரணத் தொகையில் இருந்து ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு பணம் வழங்கப்பட்டதாக புகார் கூறியுள்ளார்.
மக்களின் பணம் சோனியா காந்தி நடத்தும் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள அவர், இது மாபெரும் துரோகம் எனவும் காட்டமாக விமர்சித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் செய்திதொடர்பாளர் ரன்தீப் சுர்ஜஜேவாலா, பாஜக 2005ம் ஆண்டிலேயே வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், 2020-ம் ஆண்டில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.