கல்வான் எல்லையில் இன்னும் இந்தியா, சீன படைகள் அதிகளவில் குவிக்கப்பட்டிருப்பதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
கல்வான் எல்லை மட்டுமின்றி இந்தியாவின் மற்றொரு பகுதியான டெப்சாங்கிலும் சீன படை நுழைந்துவிட்டதாக தகவல் வந்ததையடுத்து ராணுவ தலைமை தளபதி எம்.எம் நரவானே, லே பகுதியில் இரண்டு நாட்கள் முகாமிட்டு களநிலவரத்தை ஆய்வு செய்தார்.
இந்நிலையில், எல்லை நிலவரம் தொடர்பாக வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா டெல்லியில் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார், அப்போது, சீனா இதற்கு முன்பும் பலமுறை இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்திருப்பதாகக் கூறினார்.
ஆனால், இந்த ஆண்டு சீன படைகளின் நடவடிக்கை இருநாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தை புறக்கணிப்பதை போன்று உள்ளதாக விமர்சித்த அவர், எல்லையில் அதிகப்படியான படைகளை குவித்திருப்பதுடன், சீனாவின் அணுகுமுறையும் மோசமடைந்திருப்பதாக குற்றம்சாட்டினார்.