அதிக திறன்வாய்ந்த 'ஸ்பைஸ் 2000' குண்டுகளை வாங்க திட்டம்... கூடுதல் வலுப்பெறும் இந்திய ராணுவம்
'ஸ்பைஸ் 2000'
சீனா உடனான எல்லைத்தகராறு தீவிரமடைந்துள்ள நிலையில், ஸ்பைஸ் 2000 ரக அதிக திறன்வாய்ந்த குண்டுகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் இந்திய ராணுவம் கூடுதல் வலுப்பெறும் என கருதப்படுகிறது.
2019 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் இந்திய விமானப்படை நுழைந்து துல்லியத்தாக்குதல் நடத்தி, ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் பயங்கரவாத முகாம்களை அழித்தது. அப்போது ஸ்பைஸ் 2000 ரக குண்டுகள் தான் பயன்படுத்தப்பட்டன.
இந்நிலையில் தற்போது லடாக் எல்லையில் சீன வீரர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்ததை அடுத்து இருநாடுகள் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்திய ராணுவத்தை வலுப்படுத்தும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இந்திய ராணுவத்துக்கு ஸ்பைஸ் 2000 ரக குண்டுகளை அதிக எண்ணிக்கையில் வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த வகை குண்டுகள் 70 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இலக்குகளையும் தாக்கி அழிக்கும் திறன்கொண்டவை. பாலகோட் தாக்குதலில் கட்டடங்கள் மற்றும் பதுங்கு குழிகளில் ஊடுருவி பயங்கரவாதிகளை அழிக்க ஸ்பைஸ் 2000 ரக குண்டுகளே உதவின.
லடாக் மோதலை அடுத்து மத்திய அரசு தனது அவசரகால அதிகாரத்தைப் பயன்படுத்தி, பலத்தை அதிகரிக்க பாதுகாப்புப்படைகளுக்கு 500 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கு முன்பு உரி பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்ட போது. பாதுகாப்புப்படைகளுக்கு இதேபோன்ற நிதியை கையாள்வதற்கான அதிகாரம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என 27 நாடுகள் ஐக்கிய நாடுகள் அவையில் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. 27 நாடுகளின் கூட்டறிக்கை சீனாவுக்கு சர்வதேச அரங்கில் நெருக்கடியை அதிகரித்துள்ளது.