1962-ம் ஆண்டுக்குப் பின் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்த கல்வான் பள்ளத்தாக்கு
கோப்புப்படம்
இந்திய - சீன வீரர்கள் இடையே மோதல் வெடித்துள்ள நிலையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதி எங்கு அமைந்துள்ளது. அப்பகுதியின் பின்னணி என்ன என்பது குறித்து பார்க்கலாம்
இந்தியா - சீனா இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 1962 ஆம் ஆண்டுக்கு பிறகு கல்வான் பள்ளத்தாக்கு பகுதி மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கிழக்கு லடாக் பகுதியில் அமைந்துள்ள கல்வான் ஆறு கடந்த சில நாட்களாக பதற்ற நெருப்பால் பற்றியெரிந்து வருகிறது.
கல்வான் நதி கடல் மட்டத்தில் இருந்து 4,350 மீட்டர் உயரத்தில் உள்ளது. சீனாவின் தெற்கு சிஞ்சியாங் பகுதியில் இருந்து காஷ்மீர் வரை நீளும் நதி கல்வான் நதியாகும். இந்த நதி சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணித்து சையோக் நதியுடன் கலக்கிறது.
இந்த நதி குறித்து 1899 ஆம் ஆண்டு முதன்முதலில் ஆய்வு செய்து கண்டறிந்த லே பகுதியைச் சேர்ந்த குலாம் ரசூல் கல்வான் என்பவரது பெயராலேயே இந்த நதி அழைக்கப்படுகிறது. இந்த நதியின் பள்ளத்தாக்கு காஷ்மீரின் வடமேற்கே அக்சாய் சின் பகுதியில் அமைந்துள்ளது.
1962 ஆம் ஆண்டு இந்தியாவுடன் நடைபெற்ற போரில், இப்பகுதியை சீனா தன்வசப்படுத்திக் கொண்டது. இந்த பகுதியில் எல்லை தெளிவாக வரையறுக்கப்படாததால், இரு நாட்டு படையினரும் அப்பகுதிக்கு உரிமை கோரி வந்தனர். அதன்பிறகு எப்போதும் அந்த பகுதியில் தற்போது ஏற்பட்டதை போன்ற பதற்றம் ஏற்பட்டதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.