கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோங், தவுலத் பெக் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 5 வாரங்களுக்கும் மேலாக இந்திய சீன ராணுவத்தினரிடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. மே மாதம் முதல் வாரத்தில் இருநாட்டு வீரர்கள் இடையே மோதல் வெடித்ததால் எல்லையில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் இருநாடுகளும் எல்லையில் தங்களது படைகளை குவித்து வந்தன.
இதனை அடுத்து, ராணுவ அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர் பேச்சுவார்த்தைகளில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதை அடுத்து, படைகளை விலக்கிக் கொள்ள இருநாடுகளும் ஒப்புதல் தெரிவித்தன.
இதையடுத்து கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து இருநாடுகளும் படைகளை விலக்கிக் கொள்ளத் தொடங்கின.
இந்த சூழலில் நேற்று முன்தினம் பாயிண்ட் 14 எனும் இடத்தில் இரவு திடீரென இரண்டு நாட்டு வீரர்களிடையே மோதல் வெடித்தது. இந்த பகுதியில் சீன படைகள் கூடாரம் அடித்து தங்கியுள்ளனர். இந்த கூடாரங்களை அகற்றக் கூறி இந்திய படையினர் கூறியுள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் மோதல் வெடித்துள்ளது.
இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சீன தரப்பில் 43 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன,
இந்த நிலையில், சீனா அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் நாளேட்டின் ஆசிரியர், இந்தியாவைக் கண்டு தாங்கள் அச்சப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக டிவீட் செய்துள்ள குளோபல் டைம்ஸ் நாளேட்டின் தலைமை செய்தி ஆசிரியர் ஹு சிஜின், இந்திய தாக்குதலால் சீன ராணுவத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சீனாவின் பொறுமையை, பயம் என்று தவறாக புரிந்துகொள்ள வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சாஹ் லிஜியான், இந்தியப் படைகள் எல்லைதாண்டி வரக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து இந்தியாவிடம் சீனாவின் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.