தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பொது போக்குவரத்திற்கு அனுமதியில்லை என்பதால், தொலைதூரத்தில் செல்ல வேண்டிய பேருந்துகள் காலை நேரத்திலேயே இயக்கப்பட்டன.
இந்த சூழலில் ஆம்னி பேருந்துகளை பகல் நேரத்தில் இயக்க போவதில்லை என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. கொரோனாவுக்கு பிறகு 800 பேருந்துகளே இயக்கப்பட்ட நிலையில், தற்போது இரவு நேர முழு ஊரடங்கு அறிவிப்பால் இன்று முதல் ஆம்னி பேருந்து போக்குவரத்தை நிறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து ஆம்னி கிளை சங்கங்களும் இணைந்து இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், ஒரு சிலர் மட்டும் பேருந்துகளை இயக்குவதாக கூறுவது வருத்தமளிப்பதாகவும் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தலைவர் ஜெயம்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு பணம் திரும்ப அளிக்கப்படும் எனவும் பயணிகள் சிரமத்திற்கு மன்னித்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.