ரமலான் தொழுகைக்கு அரசு அனுமதி தருமா? இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடென்ட் அபூபக்கர் விளக்கம்

ரமலான் பண்டிகைக்காக சிறப்புத் தொழுகை நடத்துவதற்கு அரசின் வழிமுறைகளை கருத்தில் கொண்டு இஸ்லாமியர்கள் செயல்பட உள்ளதாக இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடென்ட் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

ரமலான் தொழுகைக்கு அரசு அனுமதி தருமா? இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடென்ட் அபூபக்கர் விளக்கம்

கொரோனா தடுப்பு குறித்து சென்னை தலைமை செயலகத்தில், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் அனைத்து மதத்தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் மத தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரசிடெண்ட் அபூபக்கர், ரமலான் பண்டிகையில் கட்டுபாடுகளை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அரசு விதிக்கும் நடைமுறைகளுக்கு இஸ்லாமிய சமூகம் முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என்று அரசிடம் உறுதி அளித்துள்ளதாகவும் கூறினார்.

மேலும், ரமலான் பண்டிகைக்கான சிறப்பு தொழுகை( லைலதுல் கதிர்) ஞாயிற்றுக்கிழமை வருவதால் அரசு அனுமதித்தால் அன்று தொழுகை நடத்துவோம் என்று கூறிய அவர், அல்லது ஒரு நாள் முன்னரோ, பின்னரோ தொழுகை நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும், அரசின் முடிவிற்கு நாங்கள் கட்டுப்படுவோம் என்றும் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்,காவல்துறை தலைவர் திரிபாதி, அறநிலையத்துறை கூடுதல் செயலாளர் விக்ரம் கபூர்,மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Published by:Vijay R
First published:April 20, 2021, 22:37 IST