மதுரையில் ரெம்டெசிவிர் மருந்து கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை

மதுரை ஆட்சியர் அலுவலக வாயிலில் ரெம்டெசிவர் மருந்து கேட்டு ஐம்பதுக்கும் மேற்பட்ட நோயாளிகளின் உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

மதுரையில் ரெம்டெசிவிர் மருந்து கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மே 8-ம் தேதி முதல் ரெம்டெசிவர் மருந்து மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. அப்போது, அந்த மருந்தை பெற அதிகமான மக்கள் கூடியதாலும், மருந்தை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்றதாலும் மருந்து விநியோகத்தை அரசு நிறுத்தியது. மேலும், தனியார் மருத்துவமனைகளுக்கு அரசே நேரடியாக ரெம்டெசிவர் மருந்துகளை விநியோகம் செய்யும் என்றும் அறிவிப்பு வெளியாகியது.

இந்நிலையில், இன்று காலை மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஐம்பதுக்கும் மேற்பட்ட நோயாளிகளின் உறவினர்கள் கூடி முற்றுகையிட்டனர். ஏற்கனவே, ரெம்டெசிவர் மருந்திற்காக வழங்கப்பட்ட டோக்கனுக்கு உரிய மருந்துகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். தனியார் மருத்துவமனைகளுக்கு இதுவரை ரெம்டெசிவர் மருந்துகளை அரசு விநியோகிக்கவில்லை என்றும், பெரிய மருத்துவமனைகளுக்கு மட்டுமே விநியோகித்து உள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.

மேலும், சிறிய மருத்துவமனைகளுக்கு மருந்துகளை இதுவரை வழங்காத காரணத்தால் எப்படியாவது ரெம்டெசிவர் மருந்தை பெற்று வருமாறு மருத்துவர்கள் சொல்லியதால் தாங்கள் இங்கு வந்துள்ளதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய அவர்கள், அரசு உடனே நடவடிக்கை எடுத்து, தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவர் மருந்து வழங்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Karthick S
First published:May 19, 2021, 23:25 IST