
- News18 Tamil
- Last Updated: May 19, 2021, 17:27 IST
கோவை காமாட்சிபுரி ஆதீனம் சக்தி பீடத்தில் கொரோனா தேவி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் கோவை இருகூர் காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கொரோனா மாரியம்மன் கோவிலை கட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ‘இதற்கு முன்பு அம்மை நோய், காலரா ஏற்பட்ட போது மக்கள் பல உயிர்களை இழந்தனர். அப்போது தெய்வமே துணை என்ற வாக்கின்படி கிராமங்களிலே மாரியம்மன், மாகாளியம்மன், பிளேக் மாரியம்மன் என்ற வழிபாட்டினை ஏற்படுத்தினர். வேப்பிலை கும்பங்களும் நடுகற்களும் வைக்கப்பட்டு வழிபட்ட இடம் பிற்காலத்தில் கோவிலாக மாறியது.
இதற்காக எழுதப்பட்ட சாஸ்திரங்கள் எதுவும் இல்லாவிட்டாலும் மக்களாக ஏற்படுத்திய வழிபாடாகும். அதுபோல இன்று கொரோனோ கிருமி பாதிக்கப்பட்டவர்களைக் கண்டு பயப்படாமல் திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்று கொரோனா தேவி கருங்கல்லாலான சிலை வடிவமைக்கப்பட்டு 48 நாள் மகா யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த யாகத்திற்கு பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. ஆலய பணியாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இன்று பழமை வாய்ந்த கிராமங்களில் மாரியம்மன், மாகாளியம்மன் இருப்பது போல இந்த கொரோனா தேவி வழிபாடும் அவசியமாகிறது. அரசின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப மக்கள் நடந்து கொள்ளும்படியும் முகக் கவசம், தனிமனித இடைவெளி, ஆரோக்கிய உணவு ஆகியன அவசியம் என்றும் தெரிவித்தார்.
ஆதினத்தின் மூலம் செயல்படும் உலக சமாதான தெய்வீகப் பேரவை சார்பாக கிராமங்களுக்கு கபசுரக் குடிநீர், முகக் கவசங்கள், மதிய உணவு ஆகியன தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இருப்பவர் இல்லாதவருக்கு உதவுங்கள் என்று தெரிவித்தனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்