- News18 Tamil
- Last Updated: April 16, 2021, 21:38 IST
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பஞ்சாப் கிங்ஸ் இன்னிங்ஸை கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் ஓப்பன் செய்தனர்.
தீபக் சஹர் முதல் ஓவரை வீசினார். பவர் ப்ளேவில் விக்கெட்டுகளை வீழ்த்தும் தீபக் சஹார் கடந்த போட்டியில் விக்கெட்டே எடுக்கவில்லை. ஆனால் இன்றையப் போட்டியில் முதல் ஓவரின் 4வது பந்திலே மயங்க் அகர்வாலை க்ளீன் போல்ட் செய்தார். இதனையடுத்து கிறிஸ் கெய்ல் களம் புகுந்தார். முதல் ஓவரின் கடைசி பந்தில் கிறிஸ் கெய்ல் கொடுத்த பந்து வீச்சை ருதுராஜ் கெய்க்வாட் வீணடித்தார்.
தீபக் சஹர் வீசிய இரண்டாவது ஓவரில் கெய்ல் ஒரு சிங்கிள் எடுக்க முயன்றார் கே.எல்.ராகுல் கீறிஸை ரீச் செய்வதற்கு முன்பு ஜடேஜா ரன் அவுட் செய்தார். ராகுல் 5 ரன்களில் ஏமாற்றத்துடன் வெளியேறினார். இதனையடுத்து கடந்தப்போட்டியில் அதிரடியாக ஆடிய தீபக் ஹூடா களமிறங்கினார். தீபக் சஹரின் மூன்றாவது ஓவரின் 2-வது பந்தில் கிறிஸ் கெய்ல் சிக்கினார். தீபக் வீசிய ஸ்லோ பந்தை ட்ரைவ் செய்ய முற்பட்டு ஜடேஜா வசம் சிக்கினார் கெய்ல். 10 ரன்களில் வெளியேறினார் கெய்ல். இதனையடுத்து நிக்கோலஸ் பூரன் களமிறங்கினார். தீபக் சஹர் ஷாட்டாக வீசிய பந்தை தூக்கியடிக்க முயன்று தாக்கூரிடம் கேட்ச் கொடுத்தார். 2 பந்துகளை சந்தித்த பூரன் ரன் எதுவும் இல்லாமல் வெளியேறினார்.
பஞ்சாப் அணி 4.4 ஓவரில் 19 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது. ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் தீபக் ஹூடா பவுண்டரி விளாசினார். பஞ்சாப் அணி பவர்ப்ளே முடிவில் 6 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழப்பு 26 ரன்கள் எடுத்தது. தீபக் தனது 4-வது ஓவரை வீசினார். 2-வது பந்தை மிட் ஆஃப் திசையில் தீபக் ஹூடா அடிக்க முற்பட்டு டுப்ளிசிஸ் வசம் சிக்கினார். 10 ரன்களில் தீபக் ஹூடா வெளியேறினார். 4 ஓவரை வீசிய தீபக் சஹர் 1 மெய்டனுடன் 13 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளினார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
