
- News18 Tamil
- Last Updated: April 20, 2021, 17:45 IST
தமிழ்நாட்டில் ஒருபுறம் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வந்தாலும் இந்தியாவிலேயே அதிகமான தடுப்பூசிகள் தமிழ்நாட்டில்தான் வீணாகி உள்ளன. இதுவரை 12.1% தடுப்பு மருந்துகள் தமிழ்நாட்டில் வீணாகி உள்ளன. தகவலறியும் உரிமைசட்டம் மூலம் இத்தகவல் தெரியவந்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் தடுப்பூசி வீணாகுதல் சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறது. தடுப்பூசி வீணடித்ததில் அரசின் நிர்வாக குளறுபடியே காரணம் என தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், ‘ போலியோ-மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களுக்கான தடுப்பு மருந்துகளை பொதுமக்களிடம் சேர்த்ததில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த தமிழகம், கொரோனா தடுப்பூசிகளை வீணடித்ததில் முதலிடத்தில் உள்ளது. ஏப்ரல் வரை நமக்கு அனுப்பப்பட்ட 54.28 லட்சம் தடுப்பூசிகளில் 12.10% வீணாகியுள்ளது தகவலறியும் உரிமைசட்டம் மூலம் மத்திய அரசு தந்த இத்தகவல், அரசின் நிர்வாக குளறுபடியை காட்டுகிறது.
கொரோனா தடுப்பூசிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவற்றை மக்களிடம் சேர்க்கும் பணியை ஒருங்கிணைக்காமல், இறுதிகட்ட கொள்ளை-போலி விளம்பரங்களில் கவனம் செலுத்தியதே இதற்கு காரணம்.இப்படி மக்கள் மீது அக்கறையற்ற அரசால், கொரோனா 2-ம் அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 4-ம் இடத்தில் உள்ளது’எனத் தெரிவித்துள்ளார்.