
- News18 Tamil
- Last Updated: April 17, 2021, 15:32 IST
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கர்நாடகத்திலும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெங்களூருவில் கொரோனா நோயாளிகளை அனுமதிக்க தேவையான படுக்கை வசதிகள் இல்லை என்றும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருத்து தட்டுப்பாடு நிலவுவதாகவும் புகார் எழுந்துள்ளது. பெங்களூருவில் கடந்த சில தினங்களுக்கு முன் படுக்கை வசதி கிடைக்காமல் நீண்ட போராட்டத்துக்கு பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்த நிலையில், தற்போது படுக்கை வசதியும், ரெம்டெசிவிர் மருந்து கிடைக்காமல் மருத்துவரின் தந்தை காலமாகியுள்ளார்.
பெங்களூருவை சேர்ந்த மருத்துவர் அஸ்வினி சரோடா. 70 வயதான இவரது தந்தைக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தலைச்சுற்றல் மற்றும் வாந்தி எடுத்துள்ளார். அவருக்கு கிட்னியில் பிரச்னை இருந்துள்ளது. இதற்காக சில வருடங்களுக்கு முன்பு அறுவை சிசிச்சையும் மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர். இரண்டு நாள்கள் கழித்து மருத்துவமனையில் அவருக்கு டெஸ்ட் எடுத்துள்ளனர். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் படுக்கை வசதிக்காக அழைந்து இறுதியில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமாகி கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து பேசியுள்ள மருத்துவர், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் தந்தையை அனுமதித்தோம். அம்மா உடன் இருந்து அவரை கவனித்துக்கொண்டார். இரண்டு நாள்கள் கழித்து அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அம்மாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டதா எனத் தெரியவில்லை. ஏனெனில் வீட்டில் உள்ள யாருக்கும் கொரோனா நோய்த்தொற்று இல்லை. என்னுடைய தந்தைக்கு ரெம்டெசிவிர் மருந்து தேவைப்பட்டது. அதன்காரணாமாக அவரை வேறு மருத்துவமனையில் அனுமதிக்க முடிவு செய்தோம்.