கொரோனா ஊரடங்கால் அன்றாட வேலைகளுக்கு செல்லும் கூலித் தொழிலாளர்கள், ஊரைவிட்டு பிழைப்பு தேடி நகரம் மாநகரங்களுக்கு வந்த மக்கள் என பலரும் பசி பட்டினியால் வாடி வதங்கிக் கொண்டிருக்கும் சூழல் இது. இந்நிலையி
கொரோனா ஊரடங்கால் அன்றாட வேலைகளுக்கு செல்லும் கூலித் தொழிலாளர்கள், ஊரைவிட்டு பிழைப்பு தேடி நகரம் மாநகரங்களுக்கு வந்த மக்கள் என பலரும் பசி பட்டினியால் வாடி வதங்கிக் கொண்டிருக்கும் சூழல் இது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட போக்குவரத்து எஸ்.ஐ. குமாரராஜா பசியால் வாடுகிற கூலித்தொழிலாளர்களுக்கு மனிதநேயத்துடன் தினமும் உணவளித்து பாராட்டுகளை குவித்து வருகிறார்.
இதுகுறித்து, எஸ்.ஐ. குமாரராஜாவிடம் நாம் கேட்டபோது, “மத்திய - மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ளன. இந்த, ஊரடங்கால் கடைகள் சீக்கிரமாக மூடப்படுகிறது. மருத்துவமனைக்கு செல்லும் மக்களின் கூட்டமும் வீடு இல்லாதவர்கள், ஒரு வேளை சாப்பாட்டிற்கு வழி இல்லாதவர்கள் என அனைவரின் கஷ்டங்களை நான் பணிபுரியும்போது பார்க்கிறோம். எங்களால், பார்த்துக்கொண்டு கடந்து செல்லமுடியவில்லை. இதனால் என்னுடன் காவல்துறையில் பணிபுரியும் நண்பர்கள், அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து ஒரு குழுவாக செயல்பட்டு வருகிறோம்.
போக்குவரத்து காவல் துறை சார்பாகவும் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் அவர்களின் ஆதரவால் நாங்கள் இந்த முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம். கண்காணிப்பாளர் முதலில் எங்களுக்கு அறிவுறுத்தியது என்னவென்றால், மக்களிடம் கனிவாகவும் முடிந்த அளவில் அவர்களுக்கு உதவியை செய்யுமாறு அறிவுத்தினார். அவரது, அறிவுரைதான் எங்களை ஊக்கப்படுத்தியது.
ஆதலால், போக்குவரத்துத் துறை சார்பில் இந்த சிறிய முயற்சியை மேற்கொண்டோம்” என்கிறவர், ‘அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்பெற்றான் பொருள்வைப் புழி’ என்ற திருக்குறள் வரிகளைச் சுட்டிக்காட்டி பேசுகிறார். “இதன் பொருள் என்னவென்றால், எதுவும் இல்லாதவர்களின் கடும்பசியை தீர்த்து வைக்க வேண்டும். அதுதான் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும். அதுபோல, மக்களின் பசியை போக்கினால் அதுவே நாம் சேர்த்து வைக்கும் பொருளாகும் என்கிறார்.
இந்த அடிப்படையில்தான் எஸ்.ஐ குமாரராஜா மற்றும் குழுவினர், ஒரு நாளைக்கு 100,150 பேருக்கு உணவு அளித்து வருகிறார்கள். இதனைப் பார்த்து பலரும் இவர்களுக்கு பொருள் உதவி செய்கிறார்கள். இதுபோன்று, மற்றவர்களும் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார். மேலும் அவர், “முடிந்த அளவிற்கு வெளியே வராதீர்கள், முகக்கவசத்தினை அணியுங்கள். அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டால், கொரோனாவைக் கட்டுப்படுத்தலாம்” என்று ஆலோசனையாக கூறுகிறார்.
செய்தியாளர்: சு.பூஜா - விழுப்புரம்