
- News18 Tamil
- Last Updated: April 22, 2021, 20:23 IST
தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறியப்படும் தாமு மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரிடம் சினிமா கற்றவர். திரைப்படத் துறையைத் தாண்டி கல்வித் துறையில் கடந்த 10 ஆண்டுகளாக ஆற்றிய சேவைகளுக்காக நடிகர் தாமுவுக்கு தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் ( CEGR National Council) ‘ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021’ தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது அளித்துள்ளது. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடைப்பெற்றது.
நிகழ்ச்சியில் மறைந்த நடிகர் விவேக் திருவுருவப் படத்திற்கு நடிகர் தாமு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர்,ஆன்லைன் கல்வியால் மாணவர்களின் வளர்ச்சிக்கு பயனில்லை இந்த கல்விமுறை 25% மட்டுமே பயனளிக்கிறது என்றும் தெரிவித்தார். கொரோனாவால் வேறு வழியின்றி ஆன்லைன் கல்வி ஊக்குவிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நடிகர் விவேக்கை எப்படி பசுமை புரட்சியை ஏற்படுத்த நியமித்தாரோ, அதேபோல் என்னை மாணவர்களின் வளர்ச்சிக்கு பயிற்சியளிக்க நியமித்தார். இந்தியா வளர்ச்சியடைதற்கு கலாம் பல்வேறு நபர்களை நியமித்து பொறுப்புகளை ஒப்படைத்துள்ளதாக குறிப்பிட்டார்.