தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க அனைத்து திறனையும் முழுமையாக பயன்படுத்த வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி

கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க அனைத்து திறனையும் முழுமையாக பயன்படுத்துமாறு, பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.

தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க அனைத்து திறனையும் முழுமையாக பயன்படுத்த வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பல்வேறு அமைச்சகங்களின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் நேற்று இரவு ஆலோசனை நடத்தினார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி போடும் பணி, தடுப்பு மருந்து இருப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பேசிய பிரதமர், கடந்த ஆண்டைப் போல கொரோனாவை தோற்கடிக்க செயல்பட வேண்டுமென்றும், கூடுதல் வேகம், ஒத்துழைப்பு தேவை என்றும் கூறினார்.

மருத்துவமனைகள், தற்காலிக மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் முகாம்கள் மூலம் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார். மக்களின் சந்தேகங்களை தீர்க்க உள்ளூர் நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார். மருத்துவ ஆக்ஸிஜன் ஆலைகள் நிறுவுவதை துரிதப்படுத்த வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க... ரெம்டெசிவிர் விலை குறைப்பு.. ரூ.2,800 லிருந்து ரூ.899-க்கு விற்பனை

மாநிலங்களுக்கு ரெம்டெசிவர் கிடைப்பது குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார். மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு செயல்பட வேண்டும் என்றும் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Vaijayanthi S
First published:April 18, 2021, 07:56 am